செய்திகள்

கண்டமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பெண் உடல் நசுங்கி பலி - 3 பேர் படுகாயம்

Published On 2017-08-21 11:06 GMT   |   Update On 2017-08-21 11:06 GMT
கண்டமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தார்.
விழுப்புரம்:

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 43). புதுவையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீத்தாலட்சுமி (வயது 40). இவர்களுக்கு கீர்த்திகா (9) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது மனைவி, மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான உமா ஆகியோருடன் புதுவையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றார். சுற்றுலாவை முடித்து விட்டு பிரகாஷ், சீத்தாலட்சுமி உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து அதே காரில் புதுவைக்கு புறப்பட்டனர். பிரகாஷ் காரை ஓட்டினார்.

இந்த கார் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிதென்னல் பஸ்நிறுத்தம் அருகே இன்று அதிகாலை 1 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் பிரகாஷின் கட்டுபாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய பிரகாஷ், அவரது மனைவி சீத்தாலட்சுமி, மகள் கீர்த்திகா மற்றும் உறவினர் உமா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.படு காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சீத்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார். பிரகாஷ் உள்ளிட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படு காயம் அடைந்த பிரகாஷ் புதுவை முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஆவார்.
Tags:    

Similar News