சிவகிரி அருகே லாரி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
சிவகிரி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன்(வயது48). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று மாலை சிவகிரி அருகே உள்ள வரிவிழிகுளத்தில் மணல் அள்ளுவதற்காக டிப்பர் லாரியில் சென்றார். குளத்தில் மணலை அள்ளி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள சகதியில் லாரி சக்கரம் சிக்கி கொண்டது.
சகதியில் இருந்து லாரி எடுக்க ராமகிருஷ்ணன் முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலன் கொடுக்கவில்லை. உடனடியாக அவர் லாரியில் உள்ள மணலை கீழே தட்டிவிட்டு பின்னர் சகதியில் இருந்து லாரி எடுக்க முயன்றார்.
இதையடுத்து மணலை தட்டுவதற்காக லாரியின் பின் பகுதியை தூக்கினார். அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மெயின் ஒயரில் தட்டியது. இதில் மின்சாரம் பாய்ந்து ராமகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சிவகிரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பலியான ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.