செய்திகள்

காதல் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2017-08-19 13:51 GMT   |   Update On 2017-08-19 13:51 GMT
சூலூர் அருகே காதல் கணவர் பிரிந்து சென்றதால் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அஞ்சலி என்கிற மேனகா (வயது 21). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி வாகராயம் பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலர்களாக மாறினர்.

பின்னர் கடந்த ஜூன் மாதம் பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.

சிறிது நாள் கழித்து அந்த மில்லில் வேலை செய்ய விருப்பம் இல்லாததால் சுல்தான் பேட்டையில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தனர். அங்குள்ள மில் குடியிருப்பில் தங்கி இருந்து கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் மனோஜ் கடந்த 12-ந் தேதி கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று குடும்ப செலவுக்கு பண வாங்கி வருவதாக தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றார்.

அவர் சென்று 4 நாட்கள் ஆகியும் மனோஜ் வீட்டுக்கு திரும்பாததால் அஞ்சலி மிகுந்த மனவேதனை அடைந்தார். தன்னை தனது கணவர் காதலித்து திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக நினைத்த அஞ்சலி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த வார்டன் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அஞ்சலியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அஞ்சலி திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News