செய்திகள்

காரில் கடத்தி வந்த ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

Published On 2017-08-14 16:16 GMT   |   Update On 2017-08-14 16:16 GMT
கர்நாடகத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்தி வந்த ஒரு டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தென் மாவட்டங்களுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன், போலீசார் ரவிச்சந்திரன், குழந்தைவேலு, உதயகுமார் ஆகியோர் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகிய புகையிலை பொருட்கள் சுமார் ஒரு டன் அளவிற்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒரு டன் புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த முனீஸ்வரன், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கர்நாடகாவில் இருந்து மயிலாடுதுறைக்கு அந்த புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News