செய்திகள்

முதலியார்பேட்டையில் மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-08-14 11:06 GMT   |   Update On 2017-08-14 11:06 GMT
முதலியார்பேட்டையில் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து வந்த கணவரை மனைவி திட்டியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது43), கூலித்தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.

திருநாவுக்கரசு வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து வந்ததால் மனைவி சித்ரா கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று திருநாவுக்கரசு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சித்ரா திருநாவுக்கரசிடம் தினசரி குடித்துவிட்டு வருகிறீர்களே மகளுக்கு திருமணம் செய்ய வேண்டாமா என்று திட்டினார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியிடம் கோபித்து கொண்டு வண்ணான்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று அங்கு திருநாவுக்கரசு மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து வெளியே சென்று இருந்த திருநாவுக்கரசின் தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து தூக்கில் இருந்து திருநாவுக்கரசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திருநாவுக்கரசு இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தாய் குப்பம்மாள் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News