செய்திகள்

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இளையராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது

Published On 2017-08-14 10:59 GMT   |   Update On 2017-08-14 11:30 GMT
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை:

காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று தீவிரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 26) ஆவார்.

இவரது பெற்றோர் பெரியசாமி-மீனாட்சி. இளையராஜாவுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் செல்வி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இளையராஜா வீரமரணம் அடைந்த செய்திகேட்டு மனைவி செல்வி, பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். கோவை மாவட்டத்துக்கு வேலைதேடி சென்ற தந்தை பெரியசாமியை தொடர்பு கொண்டு இளையராஜாவின் மரண செய்தியை தெரிவிக்க முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

வீரமரணம் அடைந்த இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர்,  ராணுவ வாகனம் மூலம் இளையராஜா உடல் அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவகங்கை கலெக்டர் மலர் விழி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தங்கள் ஊரை சேர்ந்த வீரர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த செய்தி கேட்டு கண்டனி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இளையராஜாவின் மரணத்தால் விழா கொண்டாடப்படவில்லை.

தந்தை ஊரில் இல்லாத நிலையில், இளையராஜாவின் இறுதிச் சடங்குகளை அவரது தாயார் மீனாட்சி செய்தார். பின்னர், இன்று மாலை சுமார் 5 மணியளவில் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் இளையராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News