செய்திகள்

வந்தவாசி அருகே அண்ணி மீது தாக்குதல்: வாலிபர் மனைவியுடன் கைது

Published On 2017-08-14 10:28 GMT   |   Update On 2017-08-14 10:28 GMT
வந்தவாசி அருகே அண்ணியை தாக்கிய வாலிபர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி:

வந்தவாசி அருகே உள்ள ஊர்குடி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி மலர். காளிதாசின் தம்பி மகேஷ். இவரது மனைவி மேரி. இரு குடும்பத்தினரும் அருகருகே தனித்தனி வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கிடையே தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், ஊராட்சி குடிநீர் பைப் லைனில் இணைப்பு பெறுவதற்காக, காளிதாஸ், அவரது தம்பி மகேஷ் ஆகிய 2 பேரும் தங்களது வீட்டு முன்பு அருகருகே பள்ளம் தோண்டினர்.

தற்போது பெய்த கன மழைக்கு, 2 பள்ளங்களிலும் தண்ணீர் நிரம்பியது. மேரி தனது பள்ளத்தில் இருந்த தண்ணீரை பாத்திரத்தை கொண்டு அள்ளி வெளியே ஊற்றினார். அந்த தண்ணீர், பக்கத்தில் உள்ள காளிதாஸ் பள்ளத்தில் தேங்கியது.

இதனை பார்த்த மலர், மேரியிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த, மகேஷ், அண்ணி என்றும் பார்க்காமல் மலரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மலர் படுகாயமடைந்து, வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து, வடவணக்கம் பாடி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணியை தாக்கிய மகேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.

Tags:    

Similar News