செய்திகள்

கோவை அருகே தாய்-மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-08-12 10:03 GMT   |   Update On 2017-08-12 10:03 GMT
கோவை அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை துடியலூர் அருகே உள்ள தெப்பம்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கதிர் பாண்டியன். கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 25). இவர்களுக்கு ஹரிசபரிஷ்(7) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஹரிசபரிஷ் மூளை வளர்ச்சி குன்றி நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்தான். மகனின் நிலையை கண்டு முருகேஸ்வரி மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மகனுடன் முருகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி கடைக்கு சென்று வி‌ஷத்தை வாங்கி வந்த அவர் மகன் ஹரிசபரிஷ்க்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். திடீரென மனம் மாறிய அவர் தனது மகனுக்கு வாயை கழுவி விட்டார். மேலும் தனது வாயையும் கழுவிக்கொண்டார்.

இதற்கிடையே வேலை முடிந்து கதிர்பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் சிறுவன் ஹரிசபரிஷ் வாந்தி எடுத்தான். இதுகுறித்து கதிர்பாண்டியன் தனது மனைவியிடம் கேட்டார். அதற்கு அவர் சளி மருந்து கொடுத்தேன். அதனால் வாந்தி எடுத்துள்ளான் என்றார். இதையடுத்து அனைவரும் தூங்கினர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் முருகேஸ்வரி, அவரது மகன் ஹரிசபரிஷ் ஆகியோர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து கதிர் பாண்டியன் பார்த்தபோது அவர்கள் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அலறியடித்து கொண்டு 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் வி‌ஷம் குடித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News