செய்திகள்

புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி: ஊழியர் தலைமறைவு

Published On 2017-08-12 06:14 GMT   |   Update On 2017-08-12 06:14 GMT
புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி செய்து தலைமறைவான ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் சாரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பணம் வசூலிப்பாளராக வேலை செய்து வந்தார்.

இவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மீதி தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதி நிறுவனத்தின் துணை மேலாளர் சரவணபவன் பெரியக்கடை போலீசில் புகார் செய்த போது இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதையடுத்து சரவணபவன் புதுவை கோர்ட்டில் மோசடி செய்த ஊழியர் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, புகார்தாரரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்கும்படி பெரியக்கடை போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பெரியக் கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மோசடி வழக்கு பதிவு செய்து நாகராஜை தேடினார். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து நாகராஜை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News