கே.புதூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
மதுரை:
மதுரை கே.புதூர் மண்மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சங்கரசுந்தரி (வயது32). இவர் கே.கே.நகரில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்த சங்கரசுந்தரி வீட்டிற்கு புறப்பட்டார். கே.புதூர் சிப்காட் அருகே அவர் வந்தபோது 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் திடீரென சங்கரசுந்தரி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் மந்தர்ஒலி (47). இவர் மதுரை மாவட்ட கோர்ட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் மந்தர்ஒலியிடம் இருந்த பணத்தை ஜேப்படி செய்து விட்டு தப்பியோட முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அண்ணாநகர் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அஜய் குமார் (28) என்பதும், ஆரப்பாளையம் விசுவாச புரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.