செய்திகள்
கோத்தகிரியில் மின் திருட்டு: காட்டேஜ் உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
கோத்தகிரியில் குடியிருப்புக்கு இணைப்பு வாங்கி விட்டு தனது காட்டேஜூக்கு மின்சாரத்தை பயன்படுத்திய காட்டேஜ் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மின் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து கோவையில் இருந்து மின் திருட்டு பறக்கும் படை உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான குழுவினர் கோத்தகிரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோத்தகிரி கிளப்ரோடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் குடியிருப்புக்கு இணைப்பு வாங்கி விட்டு தனது காட்டேஜூக்கு மின்சாரத்தை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர். மின் திருட்டில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் திருட்டு தடுப்பு பறக்கும் படை அதிகாரி தெரிவித்தார்.