செய்திகள்

திண்டுக்கல் அருகே 4 மாதமாக குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

Published On 2017-07-24 11:34 GMT   |   Update On 2017-07-24 11:34 GMT
திண்டுக்கல் அருகே 4 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட ராகலாபுரம் பஞ்சாயத்து பரதேசிகவுண்டன்பட்டி பொதுமக்களுக்கு போர்வெல் மூலம் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 4 மாதமாக வறட்சியின் காரணமாக போர்வெல் அனைத்தும் வற்றி விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மட்டுமின்றி உப்பு தண்ணீருக்கும் காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

குடிநீர் பிரச்சினை காரணமாக 4 முறை சாலை மறியலில் மற்றும் முற்றுகை போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட முயன்றபோது அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதன்பின்பு குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று சாணார்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சம்வவம் குறித்து அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இடத்தை விட்டு நகர்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News