பழனி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்
பழனி:
பழனி நகர் மற்றும் யூனியன் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் முறையான வினியோகம் செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் தினசரி மறியல் போராட்டங்கள், முற்றுகை நடந்து வருகிறது. அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாலும் அதன் பிறகு தண்ணீர் வழங்க முடியாத நிலையில்தான் உள்ளனர்.
பாப்பம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி இன்று அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.