செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பாதிப்பு: அருப்புக்கோட்டை நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்

Published On 2017-07-10 14:09 GMT   |   Update On 2017-07-10 14:09 GMT
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலையம்பட்டி:

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில் விசைத்தறிக்கு 25 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடந்த 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, புளியம்பட்டி பகுதியில் நெசவாளர்கள் சார்பில் கஞ்சித்தொட்டி திறந்தனர். இதில் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கஞ்சி வாங்கிச் சென்றனர்.

இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி தொழில் அழியும் அபாயத்தில் உள்ளது.

எனவே இதில் இருந்து நெசவாளர்களை பாதுகாக்க வரிவிலக்கு அளிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News