செய்திகள்
பரமக்குடியில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற வசந்தகுமார் எம்.எல்.ஏ.

ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்

Published On 2017-07-08 04:59 GMT   |   Update On 2017-07-08 04:59 GMT
நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என பரமக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வசந்தகுமார் கூறியுள்ளார்.
பரமக்குடி:

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் மேலிட பார்வையாளர்கள் சஞ்சய்தத், அருள்தத்தையா, முருகன், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்குத்தான் வேலை வாய்ப்பு அளித்துள்ளனர்.


காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் சேர்ந்தால் 100-ல் 2 பேருக்கு கண்டிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும். அரசு வேலைக்கும் பரிந்துரை செய்யப்படும். காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை நீக்கினால்தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கூறவேண்டும். இந்த வரியால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

நடிகர்கள் போராடுவதை போல் அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News