செய்திகள்

பாலக்கோடு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-06-28 17:25 GMT   |   Update On 2017-06-28 17:25 GMT
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டா. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொருத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சாமந்தி (வயது 19). இவர்களுக்கு தீபக் என்ற மகன் உள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு சிவசக்தி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன்? எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்த விபரங்களும் தெரியவில்லை.

இதற்கிடையே கணவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த சாமந்தி பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ‘‘என்னை கணவரிடம் கொண்டு போய் விடுங்கள்’’ என தினமும் கூறி அழுது வந்தார். இதனால் அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலமுறை ஆறுதல் கூறினர். பல முறை ஆறுதல் கூறியும் சாமந்தி கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை.

மகளுக்கு திருமணம் செய்து வைத்து 2 வருடத்திலேயே மகளுக்கு இப்படி ஒரு நிலைமை ஆகி விட்டதே என்ற கவலை பெற்றோருக்கும் ஏற்பட்டது.இதனால் அவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் கணவருடைய நினைப்பிலேயே இருந்து வந்த சாமந்தி, கணவர் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. தனது மகன் தீபக் பற்றி சிந்திக்காமல் தனது வாழ்க்கையை ஒரே அடியாக முடித்து கொள்ள முடிவு எடுத்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் வெளியே சென்று இருந்தனர். அந்த சமயத்தில் சாமந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது இதனை யதார்த்தமாக கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டுக்குள் சென்று சாமந்தியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் சாமந்தி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News