செய்திகள்

தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் மீனவர் தற்கொலை

Published On 2017-06-26 10:17 GMT   |   Update On 2017-06-26 10:17 GMT
தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர் தேசப்பன் (வயது29), இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தேசப்பன் மனைவி நித்யா, குழந்தைகளுடன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் சிலமாதம் தனிமையில் வசித்து வந்த தேசப்பன் அதன்பிறகு தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமத்தில் உள்ள தனது அண்ணன் குப்புராஜ் வீட்டில் தங்கி மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தார்.

மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் வேதனையில் இருந்து வந்த தேசப்பன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்தார். மேலும் விரக்தியுடன் இருந்து வந்தார். அவருக்கு அண்ணன் குடும்பத்தினர் ஆறுதல் கூறிய போதும் தேசப்பன் சமாதானம் அடையாமல் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்தபடியே இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வந்த தேசப்பன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அண்ணன் குடும்பத்துடன் தூங்கினார். இன்றுகாலை பார்த்தபோது தேசப்பன் தூக்கில் தொங்கியதை கண்டு குப்புராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தூக்கில் இருந்து தேசப்பனை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தேசப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News