செய்திகள்

கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 22 பேருக்கு ஜாமீன் மறுப்பு

Published On 2017-06-23 09:51 GMT   |   Update On 2017-06-23 09:52 GMT
கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 22 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி கோடை விடுமுறைக்கு பின் கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தடுத்த கல்லூரி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மாணவர்களை கல்லூரிக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அப்போது கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கல்லூரி முதல்வர் காளிராஜ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் முதல்வர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கார் கண்ணாடி உடைந்தது. இதில் கல்லூரி முதல்வர் காளிராஜ் மண்டை உடைந்தது. அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் அரசு மாநகர பஸ்சை கடத்தி அதன் கூரை மேல் ஏறி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக 22 மாணவர்களை கைது செய்து புழல் சிறையில் 15 நாள் காவலில் அடைத்தனர்.

இந்த நிலையில் மாணவர்களை ஜாமீனில் விடக்கோரி எழும்பூர் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட்டுவிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை மாஜிஸ்திரேட்டு ஜெ.ஜெயச்சந்திரன் மனுவை விசாரித்து 22 மாணவர்களை ஜாமீனில் விட மறுப்பு தெரிவித்தார். மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News