செய்திகள்

செங்குன்றம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர்-தொழிலாளி பலி

Published On 2017-06-22 07:27 GMT   |   Update On 2017-06-22 07:27 GMT
செங்குன்றம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
செங்குன்றம்:

சென்னை துறைமுகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கோதுமைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று நள்ளிரவு புறப்பட்டு சென்றது. லாரியை ஜோத் பூரைச் சேர்ந்த ஆதூராம் என்பவர் ஓட்டினார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் செங்குன்றம் எம்.ஏ.நகர் பஸ் நிலையம் அருகே சென்றபோது டீசல் தீர்ந்ததால் லாரியை டிரைவர் ஆதூராம் ரோட்டோரம் நிறுத்தி இருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் லாரி மீது மோதியது.

இதில் டிப்பர் லாரி டிரைவர் செங்குன்றம் எம்.ஏ. நகர் வீரமாமுனிவர் தெருவைச் சேர்ந்த முருகேசன், மீஞ்சூரைச் சேர்ந்த தொழிலாளி அமாவாசை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் மாதவரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேர் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ராஜஸ்தான் லாரி டிரைவர் ஆதூராமை கைது செய்தனர்.
Tags:    

Similar News