செய்திகள்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Published On 2017-06-21 03:27 GMT   |   Update On 2017-06-21 03:27 GMT
தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தற்போது வடக்கு உள் கர்நாடகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

கடலோர ஆந்திரா முதல் தென் தமிழகம் வரை நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும்(புதன்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பி.தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

வட ஆந்திரா கடற்கரை பகுதியில் இருந்து தென் தமிழகம் வரை தமிழக கடலோர பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது வரை தமிழகத்தில் இயல்பான அளவு மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., பெரம்பலூர், மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., திருமன்னூர், காஞ்சீபுரம், அரக்கோணம், அண்ணா பல்கலைக்கழகம், திருவையாறு, சென்னை விமானநிலையம், பாபநாசம், காவேரிப்பாக்கம், செம்பரப்பாக்கம், அணைக்காரன்சத்திரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News