செய்திகள்

அரசு பொதுமருத்துவமனைக்கு தனி எம்.ஆர்.ஐ. ஸ்கேன்: நாராயணசாமி உறுதி

Published On 2017-06-12 10:29 GMT   |   Update On 2017-06-12 10:29 GMT
புதுவை அரசு மருத்துவமனைக்கு தனியாக எம்.ஆர்.ஐ .ஸ்கேன் வாங்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:

புதுவை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் பல லட்சம் அரசு பணம் வீணாகிறது. ஸ்கேன் மற்றும் கேத்லேப் கருவிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எதிர்காலத்தில் இதை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் அரசு மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செயல்படவில்லை. இதனால் அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனத்தில் நோயாளிகள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

அசோக்ஆனந்த்: அவுட்சோர்சிங் முறையில் ஸ்கேன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவசர காலத்தில் தலை காயம், நரம்பு பாதிப்பு ஏற்படும் நோயாளிகளை அழைத்துச்செல்லும் போது விபரீதங்கள் நிகழ்கிறது. ஏன் அவுட்சோர்சிங் யூனிட்டை இங்கேயே நிறுவலாமே? தனியாக ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அரசு மருத்துவமனைக்கு ஏன் வாங்கக்கூடாது?

அன்பழகன்: புதுவை அரசு தலைமை மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் வேலையை செய்கின்றனர்.

சிவா: நோயாளிகளை அழைத்துச்செல்வதில் பெரும் சிக்கல் உள்ளது. வெளியில் எடுக்கும் ஸ்கேன் தரமற்றதாக இருக்கிறது. பிரேத பரிசோதனையை ஏன் மருத்துவக்கல்லூரிக்கு மாற்றம் செய்தீர்கள். உடலை எடுத்துச்செல்லக்கூட நம்மிடம் ஆம்புலன்ஸ் இல்லை.

லட்சுமிநாராயணன்: ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் 10 ஆண்டுதான் பயன்பாட்டில் இருக்கும் என தெரிகிறது. அந்த கருவி பழுதாகும் முன்பே ஏன் நாம் புதிதாக வாங்க திட்டமிடக்கூடாது? கருவி வீணாகிய பின் திட்டம் தயாரித்து அனுப்புவதால்தான் காலதாமதம் ஏற்படுகிறது.

நாராயணசாமி: புதுவை அரசு மருத்துவமனைக்கு தனியாக எம்.ஆர்.ஐ .ஸ்கேன் வாங்கப்படும். அவுட்சோரிங் யூனிட்டை மருத்துவமனையில் நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். நோயாளிகள் வெளியே செல்லாமல் இங்கேயே பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News