செய்திகள்

விவசாயக் கடன் தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

Published On 2017-05-29 13:46 GMT   |   Update On 2017-05-29 13:46 GMT
கூட்டுறவு வங்கியில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாகண்ணு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி. முரளிதரன் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐகோர்ட்டில் வைத்து தீர்ப்பு வழங்கினர்.

அந்த தீர்ப்பில், தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலங் களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும். இந்த உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
Tags:    

Similar News