செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து சிறுவன் பலி

Published On 2017-05-27 16:51 GMT   |   Update On 2017-05-27 16:51 GMT
செட்டிக்குளம்-பொம்மனப்பாடி ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் தண்ணீர் எடுக்க சென்ற சிறுவன் விவசாய கிணற்றுக்குள் பாய்ந்து பரிதாபமாக இறந்தான்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா. இவரது மகன் முகமது அப்பாஸ் (வயது 13). 6-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு 7-ம் வகுப்பிற்கு செல்ல இருந்தான். நேற்று காலை இவன் தண்ணீர் எடுப்பதற்காக காலிக்குடங்களுடன் பொம்மனப்பாடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

செட்டிக்குளம்-பொம்மனப்பாடி ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அவன் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த முகமது அப்பாசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு முகமது அப்பாஸ் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முகமது அப்பாஸ் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.                                                                                                                                
Tags:    

Similar News