பழனியில் ஓட்டல் ஊழியர் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி
பழனி:
பழனி பஸ் நிலையம் எதிரே ஒரு ஒட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உள்ள பழைய போர்டை கழட்டி புதிய போர்டு மாட்டும்பணி இன்று காலை நடந்தது.
இந்த பணியில் ஓட்டல் ஊழியர்கள் அசாம் பகுதியை சேர்ந்த ராமு (வயது 30), பழனி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த விஜயகுமார் (24), பழனி கவுண்டன் குளத்தை சேர்ந்த கோபி (30), சிவகங்கை அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்த போஸ்பாண்டி (25), பழனி பெரியப்பா நகரை சேர்ந்த காய்கறி ஊழியர் முகமது முஸ்தபா என்கிற பாபு (37) ஆகியோர் ஈடுபட்டனர்.
பாபு, ராமு ஆகியோர் மேல்பகுதியில் இருந்து போர்டை கழட்டி கீழே கொடுக்க மற்றவர்கள் தாங்கி பிடித்தனர். அப்போது போர்டு எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பாபு, ராமு ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மற்ற 3பேர் படுகாயத்துடன் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விஜயகுமார் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.