செய்திகள்

மோடியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்: பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2017-05-22 07:01 GMT   |   Update On 2017-05-22 07:01 GMT
இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றங்களை கொண்டு வர மோடியால் மட்டுமே முடியும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பா.ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க.வினர் இரண்டாக பிரிந்து தனித்தனியாக கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த சட்டப்பேரவை உறுப்பினரும் தி.மு.க.வுக்கு போகத் தயாராக இல்லை, போகவும் இல்லை.

தி.மு.க. செல்வாக்கை இழந்து கொண்டிருப்பதால் தான் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வெவ்வேறு மாநிலத் தலைவர்களை அழைத்து கருணாநிதிக்கு விழா எடுக்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தி.மு.க.வில் 13 மத்திய மந்திரிகள் இருந்தும் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணியாக மத்தியில் ஆட்சி செய்த போது இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றோ மோடியின் ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கவுரவத்தோடு வாழ வழி வகுத்துக் கொடுத்துள்ளோம்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டவர்கள் சாதி,மத,மொழி ஆகியவற்றால் மோதல்களை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.


தமிழக மக்களை ஒன்று சேர விடாமல் சுகம் கண்டிருக்கிறார்கள். எனவே தான் மக்கள் ஒரு மாற்றம் வேண்டும், மோடி ஆட்சி மலர வேண்டும் என்ற தேடலை தொடங்கியிருக்கிறார்கள்.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கவலைகள் இல்லாத தமிழர்கள் வாழும் தமிழகமாக மாற்றுவோம். பொதுப்பணத்தை சுரண்டி தின்றவர்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும் பா.ஜனதா அரசு தண்டித்தே தீரும். இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றங்களை கொண்டு வர மோடியால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News