வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா 28-ந்தேதி நடக்கிறது

Published On 2022-07-22 07:40 GMT   |   Update On 2022-07-22 07:40 GMT
  • கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினமான வருகிற 28-ந்தேதி ஆடிஅமாவாசை விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படுகிறது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆடி அமாவாசையையொட்டி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.

அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும்போது பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள். அம்மன் வீதி உலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்துகோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறைமேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன் பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைசெய்து தர்ப்பணம் கொடுத்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை அன்று அதிக அளவில் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் ஆடி அமாவாசை ஒட்டி வருகிற 28-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் அரசுவிடுமுறை அளிக்கப்பட்டுஉள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள்இயக்கப் படுகின்றன. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News