search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்ரு தர்ப்பணம்"

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.
    • ஆகஸ்டு 16-ந்தேதி அப்பர் கயிலை காட்சி நடைபெறும்.

    அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆறு, புஷ்யமண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஐயாறப்பர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட புது திருமண தம்பதியர் அரசமரம், வேம்புமரம் சுற்றி வந்து விநாயகரை வழிபட்டனர்.

    இந்த ஆண்டு திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அடுத்தமாதம் 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசை அன்று ஐயாறப்பர் கோவிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் அப்பர் கயிலை காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று
    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புனித தீர்த்தங்களில் நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வருகிறது.

    இப்படிப்பட்ட சமயங்களில் எப்போதும் இரண்டாவது அமாவாசையையே நாம் ஆடி அமாவாசையாகக் கடைப்பிடிக்க வேண்டும். என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.

    இதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 2-வது அமாவாசையான வருகிற 16-ம் தேதி பூஜை நடக்கிறது. பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக முக்கடல் சங்கத்தில் உள்ள படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் பணியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.
    • ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் அமாவாசை தினங்க ளில் தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது ஆகும்.

    இந்த நிலையில் ஆடி மாதம் இன்று பிறப்பையொட்டி அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் இரவு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கோவில் அருகே உள்ள குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் மூலவர் வீரராகவரை வழிப்பட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காக்களூர் ஏரிக்கரை யிலும் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்து இருந்தனர்.

    கோவிலுக்குள் செல்ல அதிக அளவு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பெரும்பாலானவர் கோவில் நுழைவு வாயிலில் அருகேயே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்று வழிபட்டு சென்றனர்.

    இன்று காலை பக்தர்களின் வருகை திடீரென அதிகரித்ததால் ஜெ.என்.சாலை, ராஜாஜி சாலை, தேரடி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
    • பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.

    ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.

    கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

    இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம்.
    • தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

    • விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
    • சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது.

    தை முதல் ஆனி மாதம் வரை உள்ள பொழுது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பகல் காலம் முடிவடைந்து இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த காலத்தை தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைப்பார்கள். அதன்படி இந்த வருடம் ஆடி மாதம் முதல் நாளிலும், 31-ம் நாளிலும் 2 அமாவாசை வருகிறது. இது போன்ற விசித்திரமான மாதத்தை மலை மாதம் என்றும் அழைப்பதுண்டு.

    வழக்கமாக எல்லா அமாவாசை நாட்களும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி ஆடி மாத பிறப்பின் முதல் நாளில் அமாவாசை வருவதால் இன்று பல்வேறு இடங்களில் புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும், சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்புனித நீராடி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சுருளி அருவியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் இந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அதில் ஆனந்தமாக நீராடி அதன் பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் இங்குள்ள விஸ்வநாதர், பூதநாராயணன் கோவிலிலும் வழிபாடு செய்தனர். இது மட்டுமின்றி அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக களையிழந்து காணப்பட்ட சுருளி அருவி இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் கூட்டம் அலைமோதியது.

    இங்குள்ள கடைகளில் வியாபாரம் அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவபெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தொலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை என இரண்டும் இணைந்து வருகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருவதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பவானி சரக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடை யின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதே போல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்களள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் வந்து தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    • இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது.
    • முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் கடலில் புனித நீராடல் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

    இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந் தேதி முதல் அமாவாசையும், ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி 2-வது அமாவாசையும் வருகிறது. இந்த இரு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். 2-வது அமாவாசை வரும் ஆகஸ்டு 16-ந் தேதி பித்ரு பூஜைகள் செய்வது கூடுதல் பலன்களைத் தரும்.

    ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். முன்னோர்களுக்கு நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தானம் தர வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள்.

    திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும்.

    முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள், ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். நம்முடைய வழிபாடும், தானமும் உள்ளன்போடு இருந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

    ஆடி மாதம் பவுர்ணமி தினமும் விசேஷமானதுதான். இந்த ஆண்டு ஆடி பவுர்ணமி ஆகஸ்டு 1-ந் தேதி வருகிறது. அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

    • 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
    • பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.

    இந்துக்கள் தை அமா வாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

    அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

    மேலும் காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் மணல் பரப்பிலும் ஏராளமான புரோகி தர்கள் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.

    தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிமேற்கொண்டு வருகின்றனர்.

    அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்தப்படம்

    அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்தப்படம்

    மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் காவிரி கரையோர பகுதிகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    • கேரள பஞ்சாங்கத்தின்படி முதல் அமாவாசை நாளில் பலி தர்ப்பணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • நாளை அதிகாலை 4½ மணி முதல் பலி தர்ப்பணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசையாக வருகிறது. அதாவது நாளை (திங்கட்கிழமை) அமாவாசையுடன் ஆடி மாதம் பிறக்கிறது. இதே போல் ஆடி 31-ந் தேதி மற்றொரு அமாவாசையும் வருகிறது.

    இதனால் கேரள பஞ்சாங்கத்தின்படி முதல் அமாவாசை நாளில் பலி தர்ப்பணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் கேரள அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. எனவே கேரள எல்லையோரத்தை சேர்ந்த பெரும்பான்மையான கேரள மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். இதேபோல் குமரி மக்களும் அன்றைய தினம் பலி தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவார்கள்.

    இதனையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மகாதேவர் கோவில் அருகில் கோவில் சார்பில் பிரமாண்டமான கொட்டகை அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

    நாளை அதிகாலை 4½ மணி முதல் பலி தர்ப்பணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதி முழுவதும் நன்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

    வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    ×