ஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2019-04-17 06:08 GMT   |   Update On 2019-04-17 06:08 GMT
குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதனை சக்தி அம்மா தொடங்கி வைத்தார்.
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கியது. தினமும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி தேருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தயார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்-சிவகாமசுந்தரி அம்பாள், சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து தேரோட்டத்தை திருமலைக்கோடி ஸ்ரீபுரம் சக்தி அம்மா தொடங்கி வைத்தார். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. தேர்மீது பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டத்தில் தாசில்தார் டி.எஸ்.சாந்தி, செங்குந்தர் சங்க மாநில தலைவர் கே.பி.கே.செல்வராஜ், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் எம்.வெங்கடசுப்பு, கம்பன் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, பெட்ரோல் வணிக சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், வேலூர் நாடாளுமன்ற அ.தி.மு.க. தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மூர்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) புஷ்பபல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News