ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவர். திருவிழா காலம் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அதன்படி விடுமுறை தினமான நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரெயில்நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையங்களில் கூட்டம் இருக்கும் சமயங்களில் படிப்பாதை வழியாக பக்தர்கள் அடிவாரத்துக்கு செல்லும்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அன்னதான கூடத்திலும் நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.