ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்தபடம்.

ஸ்ரீரங்கம்: சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2018-05-03 05:09 GMT   |   Update On 2018-05-03 05:09 GMT
ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 5-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 4.45 மணிமுதல் 5.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 6-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

விழாவின் 2-ம் நாளான 6-ந்தேதி மாலை கற்பகவிருச்ச வாகனத்திலும், 7-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 8-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 10-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

11-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 12-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. முகூர்த்தகாலின் நுனியில் சந்தனம், பூ மாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முகூர்த்தக்காலை தேரில் நட்டனர்.

14-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 15-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவல் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News