ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா தொடங்கியது

Published On 2018-03-23 04:31 GMT   |   Update On 2018-03-23 04:31 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தையொட்டி நம கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்கு மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு நம் பெருமாள் காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். 24-ந் தேதி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

25-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், 26-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் நம்பெருமாள் உலா வருகிறார்.


சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

27-ந் தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில், கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

28-ந் தேதி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு, கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 29-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார்.

30-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோ ரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 1-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News