ஆன்மிகம்

கருவறை தீப ஒளி தரிசனம்

Published On 2018-02-16 06:26 GMT   |   Update On 2018-02-16 06:26 GMT
கருவறை தெய்வத்தை தீபஒளியில் மட்டுமே தரிசிக்க வேண்டும். ஏன் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கருவறை தெய்வத்தை தீபஒளியில் மட்டுமே தரிசிக்க வேண்டும். ஏன் தெரியுமா?. ஆண்டவன் குடியிருக்கும் ஆலயங்கள், மிகுந்த ஆசாரங்களுடனும், சரியான விதிமுறைபடியும் கட்டப்படும். முக்கியமாக மூலவர் இருக்கும் கருவறை தெய்வீக ஒளி, மிதமான வெப்பம், கட்டுப்படுத்தப்பட்ட காற்று இவைகளுடன் ஐதீக முறைப்படியும், சாஸ்திர சம்பிரதாயங்களுடனும் கட்டப்பட்டு, நம்பிக்கையுடன் தேடிவரும் பக்தர்களுக்கு நல்வழி காட்டும்.

வெகுகாலமாக கருவறையினுள் எண்ணெய்களால் எரியும் தீப ஒளியினால் மட்டுமே தெய்வ தரிசனைத்தைக் கண்டோம். நவீன காலங்களில் நமது பகட்டைக் காட்ட அலங்கார விளக்குகள், வண்ண வண்ண டியூப் லைட்டுகளால் கருவறையை அலங்கரிப்பதால், அதிலிருந்து வெளிப்படும் அதிக வெப்பமானது கர்ப்பக்கிரகத்தில் உள்ள மின்காந்த அலைகளை பாதிக்கிறது.

கருவறை தெய்வத்தை தீப ஒளியில் தரிசிக்கும்போது, நம் மனதில் உள்ள கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். கோவிலை நம் உடலாகவும், அங்குள்ள கருவறையை நம் மனம் போன்று இருள் கொண்டதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். இருளானது எண்ணெய் தீபம் கொண்டு விளக்கேற்றுவதால் அகன்று, அங்குள்ள தெய்வ விக்கிரகம் நம் கண்களுக்குத் தெரியும். அதே போல நம் மனதில் நிலைகொள்ளும் அஞ்ஞானம் ஏற்படுத்தும் இருளை அகற்றி, ஆத்மாவை ஞானம் பெறச் செய்ய இறையருள் துணை செய்யும்.

தற்போதுள்ள வண்ண வண்ண விளக்குகளின் அதீத ஒளியால், ஒருமுகப்படுத்த வேண்டிய மனது அடங்க மறுத்து கவனம் சிதறும். இதனால் முழு மனதுடன் நம்மால் தெய்வத்தை வணங்கமுடியாது. ஆகவே தான் மனதுக்கு சாந்தம் தந்து, உடலுக்கு நன்மை தரும் தீபத்தின் வெளிச்சமே கருவறை தெய்வங்களுக்கு ஏற்றது என்று கூறியிருக்கிறார்கள், சான்றோர்கள்.

Tags:    

Similar News