ஆன்மிகம்
பெண் வடிவில் காட்சி தரும் பிள்ளையார்
சுசீந்திரம் கோவில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் விநாயகப்பெருமான், பெண் உருவில்தான் காட்சி தருகிறார்.
முதன் முதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகப்பெருமானை, ஒரு சில இடங்களில் பெண் வடிவிலும் வழிபடுகிறார்கள். இந்தியாவிலும் கூட இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. இப்பொழுதும் இருக்கிறது.
பெண்மைக் கோலம் கொண்ட விநாயகரை ‘கணேஷினி’ என்றும், ‘கஜானனி’ என்றும் அழைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் விநாயகப்பெருமான், பெண் உருவில்தான் காட்சி தருகிறார்.
அவர் இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கி அருள்பாலிக்கிறார். அதே போல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சுவாமி சன்னிதி நுழைவு வாசலின் வலது பக்க தூணிலும், விநாயகப்பெருமானின் பெண் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால், இவரை ‘வியாக்ரபாத கணேஷினி’ என்று அழைக்கிறார்கள்.