ஆன்மிகம்
கொட்டும் மழையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் அருணாசலேஸ்வரர் தேர் முன்பு எழுந்தருளியபோது எடுத்த படம்.

கார்த்திகை தீபத்திருவிழா 8-ம் நாள்: குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

Published On 2017-12-01 03:33 GMT   |   Update On 2017-12-01 03:34 GMT
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சந்திரசேகரரும், விநாயகரும் வீதிஉலா வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-வது நாளான நேற்று முன்தினம் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

விழாவின் 8-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் குதிரை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே விநாயகரும், சந்திரசேகரரும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது மழை விட்டு, விட்டு பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மாடவீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.



மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்த காட்சி.
முன்னதாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக நின்று நன்றி தெரிவித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.

மாலை 4.30 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் மாடவீதியில் உலா வந்தபோது திரளான பொதுமக்கள், வியாபாரிகள் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்கள். பிச்சாண்டவர் உற்வசத்தின்போது உண்டியலில் காணிக்கை செலுத்தினால் வியாபாரம் விருத்தியாகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனத்தில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபதிருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்காக காடா துணிகள் மாடவீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவிலில் பூஜை நடைபெற்றது.

மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News