ஆன்மிகம்
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்

நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா

Published On 2017-07-22 03:32 GMT   |   Update On 2017-07-22 03:32 GMT
புதுவை நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுவை நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் 34-ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், சாமி வீதி உலாவும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் விழா நேற்று நடந்தது. காலையில் நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் செடல் ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியபடியும், காவடி எடுத்தபடியும் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல் பக்தர்கள் முதுகில் கொக்கிகளை அணிவித்து கார், ஜீப், வேன், மினிவேன், லாரி, பஸ் ஆகியவற்றையும் இழுத்து சென்றனர்.இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேர்பவனியும் நடந்தது. தேரை பக்தர்கள வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செடல் நிகழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

விழாவில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் உத்தரவின் மேற்பார்வையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

செடல் விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், 8 மணிக்கு நாகமுத்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விடையாற்றி விழாவும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News