ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2017-06-27 03:47 GMT   |   Update On 2017-06-27 03:47 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.



விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று அரசு விடுமுறை என்பதால் வெளி மாநிலத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த பிற மாவட்ட மக்களும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதன் காரணமாக கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு கட்டண தரிசனத்தில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News