சினிமா

சத்தமில்லாமல் நடைபெறும் `சங்கமித்ரா' பட பணிகள்

Published On 2017-10-05 03:39 GMT   |   Update On 2017-10-05 03:41 GMT
சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், `சங்கமித்ரா' படத்திற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு-2' படப்பிடிப்பு காரைக்குடியில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

அவ்னி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் இந்த படத்தில் இடம் பெறுகிறார் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க சுந்தர்.சி. இயக்கவிருக்கும் பிரமாண்ட படமான `சங்கமித்ரா' படம் குறித்தும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகை குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் `சங்கமித்ரா' குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குஷ்பு கூறியிருப்பதாவது,



`சங்கமித்ரா' தயாராகிறது... அதற்கான செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செட் அமைக்கும் பணி முடிந்த உடன் படப்பிடிப்பு உடனடியாக துவங்க இருக்கிறது. எனவே `கலகலப்பு-2', `சங்கமித்ரா' என இது ஒரு டபுள் தமாகா'

இவ்வாறு கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கேன்ஸ் பிலிம்ஸ் விழாவில் `சங்கமித்ரா' படம் தொடங்கப்பட்டது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சங்கமித்ராவாக நடிக்கவிருந்த ஸ்ருதி ஹாசன் விலகியதால் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகை திஷா படானி சங்கமித்ராவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

`கலகலப்பு-2' படத்தின் பணிகள் முடிந்த பிறகு டிசம்பரில் `சங்கமித்ரா' பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `கலகலப்பு-2' வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News