செய்திகள்

முத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-05-24 13:47 GMT   |   Update On 2019-05-24 13:47 GMT
நகை அடகு கடை நடத்தியவர் கடன் பிரச்சினையால் காருக்குள் தீக்குளித்த தற்கொலை செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாமியப்பாநகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

செந்தில்குமார் நாகை மாவட்டம் வாய்மேட்டில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.60 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

அவரால் அசல் மற்றும் வட்டியை கட்ட முடியவில்லை. அவரை கடன் கொடுத்தவர்கள் தொல்லைபடுத்தி வந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூறினார். அதனை கேட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

இதனால் மனம் மாறிய செந்தில்குமார் குடும்பத்துடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு காரில் சென்றார்.

இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டையை அடுத்த பாண்டிசத்திரம் என்ற இடத்திற்கு சென்ற செந்தில்குமார் அங்கு காரை நிறுத்தினார். பின்னர் காருக்குள் இருந்துகொண்டு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் காருடன் எரிந்து அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் கிடந்த செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News