செய்திகள்

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சியா? வாலிபரிடம் போலீசார் விசாரணை

Published On 2019-05-21 15:26 GMT   |   Update On 2019-05-21 15:26 GMT
அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சி நடந்தா என்பது குறித்து வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி சகுந்தலாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. சகுந்தலாவும், அவருடைய குழந்தையும் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.

நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் சகுந்தலா, அவருடைய கணவர் கந்தசாமி மற்றும் உறவினர்கள் உட்கார்ந்து இருந்தனர். சகுந்தலாவின் மாமியார் மாரியம்மாள், குழந்தையை வைத்து கொண்டு உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சகுந்தலா குடும்பத்தினரை பார்த்து, தள்ளி உட்காருங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சகுந்தலாவின் குழந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சகுந்தலா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

உடனே இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயன்றாரா? என்பது பற்றி பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News