செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எதிரொலி-பங்குச்சந்தைகள் அபார உயர்வு
பாராளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று அபாரமாக உயர்ந்தன.
மும்பை:
பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்த கருத்துக் கணிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்தன. காலை முதலே பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1090 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பங்குச்சந்தைகளில் ஒரே நிமிடத்தில் ரூ. 3. 2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு குவிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்தது. காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து, ரூ.69.44 என்ற அளவில் இருந்தது.