search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான் பயங்கரவாதம் - இரவுநேரத் தாக்குதலில் 14 போலீசார் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான் பயங்கரவாதம் - இரவுநேரத் தாக்குதலில் 14 போலீசார் பலி

    ஆப்கானிஸ்தானில் கஜ்னி என்ற மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். #TalibanAttack #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப் படையும், அதற்கு உதவியாக அமெரிக்க படைகளும் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கஜ்னி எனப்படும் மாகாணத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கென அப்பகுதிக்கு துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதிகள் இரவு 2 மணியளவில் பதுங்கி இருந்து அங்கிருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் முதலில் தடுமாறி, பின் எதிர்த்தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு உதவுவதற்காக பாதுகாப்பு படையினரும், அமெரிக்க கூட்டுப்படைகளும் அப்பகுதிக்கு விரைந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சண்டையில் சுமார் 14 போலீசார் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

    மிகவும் கடுமையாக நடைபெற்ற இந்த போரில் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு 39 பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் பயங்கரவாதிகள் எங்கேனும் மறைந்து இருக்கிறார்களா என்பதை அறிய வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ஹெரத் மாகாணத்திலும் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. #TalibanAttack #Afghanistan
    Next Story
    ×