search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளை நிலங்களில் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் 4-வது நாளாக போராட்டம்
    X

    விளை நிலங்களில் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் 4-வது நாளாக போராட்டம்

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நீடித்தது.

    கோவை:

    கோவையில் சுல்தான் பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப் பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பல்லடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடுங்குளிர் மற்றும் கடும் பனிப் பொழிவு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்ட பந்தலிலேயே தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்ட பந்தலில் படுத்து உறங்கினர்.

    காலையில் பந்தலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 23-ந்தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுல்தான் பேட்டையில் 17 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தொடர் உண்ணா விரதப்போராட்டம் இன்று 4- வது நாளாக நடை பெற்று வருகிறது. விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என தனிதனியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தில் போராட்ட பந்தலின் முன்பு, விவசாயிகள்தூக்கு போட்டுக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தை இதுவரை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். உண்ணாவிர போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு உண்ணாவிரத பந்தலிலேயே குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் கடந்த 10 நாட்களாக காத்திருப்பு தொடர் போராட்டம், மற்றும் தொடர் உண்ணா விரதப்போராட்டம் நடை பெற்று வருகிறது.

    போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலூரில் அனைத்து கடைகள்,மற்றும் நிறுவனங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடியில் விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத் தின்போது விவசாயிகள் ஆறுகளூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 26), இளையப்பன் (40), பெரியகுட்டிமடுவு பகுதியை சேர்ந்த குமார் (30), ராமகிருஷ்ணன்(32) ரத்த அழுத்தம், உடல் நிலை கோளாறு காரணமாக மயங்கி விழுந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்தது.

    நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள் தலைமையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று பெருமாள், பொன்னுசாமி, முருகவேல், கே.சுப்ரமணியம், நடராஜன், முத்துசாமி, சி.சுப்ரமணியம், பழனிசாமி, சுரேஷ், பச்சியப்பன் ஆகிய 10 பேர் பங்கேற்றனர். இதில் சுப்ரமணியம், நடராஜன், பழனிசாமி ஆகிய 3 பேருக்கு ரத்தஅழுத்தம் குறைவின் காரணமாக திடீரென தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது.

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள மூலக்கரை பிரிவில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. பல்வேறு நூதன வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    6 பெண்கள் உள்பட 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உண்ணா விரதம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    இதனால் 6 பெண்கள் உள்பட 11 பேரும் தொடர் உண்ணாவிரதத்தால் சோர்வாக உள்ளனர்.

    இவர்கள் உண்ணா விரதத்துடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். உண்ணாவிரதம் ஒரு புறம் நடக்க விவசாயிகள் தங்கள் இடுப்பில் வேப்பிலை கட்டி கொண்டு வாயில் அருகம் புல்லை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×