search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனைக்கு செல்ல மறுத்த சாந்தியிடம் மருத்துவ அலுவலர்கள், போலீசார் அறிவுரை கூறிய காட்சி.
    X
    மருத்துவமனைக்கு செல்ல மறுத்த சாந்தியிடம் மருத்துவ அலுவலர்கள், போலீசார் அறிவுரை கூறிய காட்சி.

    11-வது பிரசவத்திற்கு மருத்துவமனை வர மறுத்த கர்ப்பிணி

    முசிறியில் 11-வது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வர கர்ப்பிணி மறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #PregnantWoman
    முசிறி:

    முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இருவருக்கும் திருமணம் நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குமேல் ஆகிறது. இந்நிலையில் சாந்தி 10 பிரசவங்களில் 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குறிப்பாக அனைத்து குழந்தைகளுமே அவரது வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.

    பிரசவம் அனைத்தையும் சாந்தியின் கணவர் கண்ணனே உடனிருந்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கண்ணன், சாந்தி தம்பதிக்கு சீதா, கீதா, கார்த்திக், உதயகுமாரி, தர்மராஜ், சுபலட்சுமி, கிருத்திஸ்கா, தீபக், தீப்தி, ரிட்டிஸ்கண்ணன், பூஜா ஆகிய 11 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் தீப்தி மற்றும் ரிட்டிஸ்கண்ணன் ஆகியோர் உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்துள்ளனர். மூத்த மகள் சீதாவிற்கு திருமணமான நிலையில், உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். சீதாவிற்கு ஒரு மகள் உள்ளார்.



    தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வரும் சாந்தி, கண்ணன் தம்பதிக்கு மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையின் விளைவால், தற்போது சாந்தி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சுகாதார செவிலியர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்தும் சாந்தி வர மறுத்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த தாய், சேய் நல அலுவலர் உஷாராணி, தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக், குழந்தைகள் நல அலுவலர்கள் கர்ப்பிணி பெண் சாந்தியின் வீட்டிற்கு சென்றனர். மருத்துவ அலுவலர்கள் வீட்டிற்கு வருவதை அறிந்த சாந்தி முசிறி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மருத்துவ அலுவலர்கள் முசிறி அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று அங்கிருந்த சாந்தியிடம் அறிவுரை கூறி, முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ரத்தசோகைக்காக சாந்திக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஒரு குழந்தை போதும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் 11 குழந்தைகளை பெற்ற சாந்தியையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவ அலுவலர்கள் போலீசார் உதவியுடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியதாயிற்று. இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தியின், மூன்று மகள்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் சாந்தி தற்போது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PregnantWoman

    Next Story
    ×