search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ரவிராஜா.
    X
    கொலை செய்யப்பட்ட ரவிராஜா.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற டிரைவர்

    பழனியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழில் அதிபரை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    பழனி:

    பழனி டவுன் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவிராஜா (வயது54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் அறையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க முயன்றனர்.

    ஆனால் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகு அந்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து பழனி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அவரது படங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சந்துரு என தெரிய வந்தது.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ரவிராஜாவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதில் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது.

    இதனிடையே படுகாயம் அடைந்த ரவிராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய சந்துருவை தாராபுரம் சோதனைச் சாவடியில் காருடன் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பழனி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×