search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான போலி டாக்டர் சுல்தானா. சுல்தானா நடத்தி வந்த வீட்டுடன் அமைந்த கிளினிக்.
    X
    கைதான போலி டாக்டர் சுல்தானா. சுல்தானா நடத்தி வந்த வீட்டுடன் அமைந்த கிளினிக்.

    தவறான கருக்கலைப்பால் கல்லூரி மாணவி பலி- கைதான போலி பெண் டாக்டரிடம் விசாரணை

    சேலத்தில் மருத்துவம் படிக்காமல் தவறாக கருக்கலைப்பு செய்ததால் கல்லூரி மாணவி உயிரிழந்தது தொடர்பாக கைதான போலி பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் ஈவா (வயது 19). தனியார் கல்லூரியில் படித்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இதற்கிடையே கர்ப்பமான ஈவா தீவட்டிப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி கொல்லர் தெருவில் வசித்து வந்த சுல்தானா என்பவரிடம் கடந்த 11 நாட்களுக்கு முன்பு கருகலைப்பு செய்தார்.

    கருக்கலைப்பிற்கு பிறகு ஈவாவிற்கு கடும் வயிற்று வலியும், ரத்த போக்கும் ஏற்பட்டதால் 29-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் 31-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது சாவுக்கான காரணம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்த போது தவறான கருக்கலைப்பு செய்ததால் ஈவா இறந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்த போது தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியில் சுல்தானா (52) என்ற பெண் ஈவாவுக்கு கருக்கலைப்பு செய்ததும், மருத்துவம் படிக்காமல் தவறாக வைத்தியம் செய்ததால் அவர் இறந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சுல்தானா வீட்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிலேயே கிளீனிக் வைத்து படுக்கை வசதியுடன் போலி மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. மேலும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய ஊசி, கையுறை, குளுக்கோஸ் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணை இயக்குனர் வளர்மதி அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவர் சுல்தானாவை தீவட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த சுல்தானா கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

    இதனால் மேலும் வேறு நபர்களும் இதே போல தவறான சிகிச்சையால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சுல்தான சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்படுகிறார். மேலும் அவரது கர்ப்பத்திற்கு காரணம் யார் ? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருத்துவம் படிக்காமல் 15 ஆண்டுகளாக வீட்டில் வைத்து சிகிச்சை அளித்த போலி டாக்டர் குறித்து மருத்துவ அதிகாரிகளுக்கு இதுவரை தகவல் தெரியாமல் இருந்தது மர்மமாக உள்ளது. இது குறித்தும் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். #Tamilnews
    Next Story
    ×