search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளச்சாராய இறப்புகளுக்கு பா.ஜ.க.அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் - பிரியங்கா காந்தி
    X

    கள்ளச்சாராய இறப்புகளுக்கு பா.ஜ.க.அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் - பிரியங்கா காந்தி

    உத்தரகாண்ட், உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயத்துக்கு 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததற்கு அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். #UttarakandIllicitliquor #UPIllicitliquor #hoochdeaths #Priyankaandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
     
    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

    நேற்று மாலை நிலவரப்படி ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், உத்தரபிரதேசம் மாநிலம், சஹரான்பூர் எல்லைப்பகுதி வழியாக இங்கு வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சென்ற 46 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுமார் 100 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். 

    இந்த சம்பவத்தின் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் கள்ளச்சாராய விற்பனை எந்த அளவில் நடைபெற்று வந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு  இம்மாநில அரசுகள் உடனடியாக உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும்’ என பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணைபோன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்களில் இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். #UttarakandIllicitliquor #UPIllicitliquor #hoochdeaths #Priyankaandhi
    Next Story
    ×