search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி
    X

    காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment
    ஜெய்பூர்:

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மேற்கண்ட மாநிலங்களில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கு ஆட்சி அமைத்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, காங்கிரஸ் வெற்றிபெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ரபேல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்பதால் பாராளுமன்றத்துக்கு வரவே பிரதமர் மோடி பயப்படுகிறார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இவ்விவகாரத்தில் பதிலளிப்பதாக கூறி மக்களவையில் இரண்டரை மணிநேரம் பேசினார். ஆனால், அவர் வெளியிட்ட அத்தனை பொய்களுக்கும் பதிலடி கொடுத்து உண்மையை நாங்கள் தோலுரித்து காட்டி விட்டோம். எங்களின் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரிடம் எதுவும் இல்லை.



    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நடு ராத்திரியில் திடீரென்று பதவிநீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரை பதவியில் அமர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரபேல் பேரம் தொடர்பாக சி.பி.ஐ.யும் பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    56 அங்குலம் மார்புக்கு சொந்தக்காரரான பிரதமர் மோடி ஒரு நிமிடம் பாராளுமன்றத்துக்கு வருவதற்கும் பயப்படுகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விவசாயிகளின் பலம் என்ன என்பதை பிரதமர் மோடிக்கு உணர்த்தியுள்ளது. பாராளுமன்ற  தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில்  ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்

    ஆனால், வெறும் கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் நெருக்கடிக்கு தீர்வாகிவிட முடியாது. நாட்டில் ஒரு புதிய பசுமைப் புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment
    Next Story
    ×