search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
    X

    பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

    டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MamataBanarjee #Advani #NRCBill
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

    இதற்கிடையே,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், பாஜக தலைவர் அத்வானியை நீண்ட நாள்களாக அறிவேன். இந்த சந்திப்பின் போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், முக்கியமான 14  எதிர்க்கட்சி தலைவர்களையும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×