search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் அணியில் எல்லோருமே விவசாயிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள்- அன்புமணி ராமதாஸ்
    X

    எங்கள் அணியில் எல்லோருமே விவசாயிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள்- அன்புமணி ராமதாஸ்

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    சென்னை:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்றும், தங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணியின்(அ.தி.மு.க. கூட்டணி) வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

    பதில்: எங்கள் கூட்டணி மக்களை சார்ந்த கூட்டணி. இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கின்ற தேர்தல். தி.மு.க. கூட்டணியில் அனைவரும் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பெரிய கோடீஸ்வரர்களுக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கூட்டணியில் எல்லாமே விவசாயிகளின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் அணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால், எதிரணியில் தி.மு.க.வுக்கு மட்டும் தான் வாக்கு வங்கி உள்ளது. மற்ற எந்த கட்சிக்கும் வாக்கு வங்கி இல்லை. எனவே, வாக்கு வங்கியும், மக்களின் ஆதரவும் உள்ள எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    கேள்வி:- 18 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும்? அ.தி.மு.க. ஆட்சி தப்புமா?

    பதில்:- தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் 40 பாராளுமன்ற தொகுதி மட்டும் அல்ல, 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் முழுமையாக வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. நிச்சயமாக ஆட்சியை தக்க வைக்கும். அதில் சந்தேகம் இல்லை.

    கேள்வி:- பாராளுமன்றம் கூடிய நாட்களில் உங்களது வருகை 45 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறதே?

    பதில்:- கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எத்தனை முறை சட்டமன்றம் சென்றார்? ஒரு வருடத்துக்கு ஒருமுறை சென்ற அவர் மீது யாராவது குறை சொல்லி இருக்கிறார்களா? அவர் ஒரு கட்சியின் தலைவர் அவருக்கு எல்லா வேலைகளும் இருக்கும். நானும் தர்மபுரியில் இருந்தேன். தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன்.

    வருகைப்பதிவுக்கும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? 100 சதவீதம் வருகைப்பதிவு வைத்துள்ள மற்ற தொகுதி எம்.பி.க்கள் தர்மபுரியில் செய்யப்பட்டுள்ள அளவுக்கு திட்டங்கள் செய்து இருப்பார்களா? பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, 100-க்கு 70 நாட்கள் சபை ஒத்தி வைப்பு நடக்கும். எனவே, அங்கு போய் சும்மா கையெழுத்து போட்டு, டெல்லியில் உட்காருவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால், இங்கு வந்து வேலைகளை செய்தேன்.

    கேள்வி:- சமீபத்தில் வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த உங்கள் கருத்து என்ன?

    பதில்:- காங்கிரஸ் கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறுகிறார்கள். இதற்கு 3 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். எங்கே இருந்து நிதி எடுப்பார்கள்? நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை. ராகுல்காந்தி கூறுகிறார் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் மாநிலங்களில் நீட் தேர்வுக்கு பதில் வேறு பெயரில் நுழைவு தேர்வு இருக்கும் என்கிறார். மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார். இது முரண்பாடான கருத்தாகும்.

    கேள்வி:-அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைக்க பெரிய அளவில் பேரம் பேசப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே?

    பதில்:- தி.மு.க. எப்போதும் கையாளும் ஒரு பொய் இது. கடந்த தேர்தலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பெரிய அளவில் பேரம்பேசி பணம் வாங்கினார் என்று குற்றம்சாட்டிய தி.மு.க. இப்போது வைகோவை கூட்டணியில் சேர்த்து இருக்கிறது. விஜயகாந்த் மீதும் அதேபோன்று குற்றம் சாட்டினார்கள். இப்போது விஜயகாந்துடனும் கூட்டணிக்கு பேசிக் கொண்டு இருந்தார்கள். திருமாவளவனும் கடந்த தேர்தலில் பணம் பெற்றார் என்று குற்றச்சாட்டு வைத்தனர். இப்போது, அவரும் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார். தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் நல்ல கட்சி. அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்றால் பணம் வாங்கிவிட்டார்கள், மோசமான கட்சி என்று கூறுவது ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

    கேள்வி:- நீங்கள் மத்திய மந்திரியாக இருக்கும் போது கொண்டு வந்த முத்தான 3 திட்டங்கள் என்ன?

    பதில்:- 108 ஆம்புலன்சு திட்டம். இந்தியாவில் 22 மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் ஆம்புலன்சுகள் ஓடுகின்றன. கோடிக்கணக்கான உயிரை காப்பாற்றிய திட்டம் இது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் குழந்தைகள் 108 ஆம்புலன்சில் பிறந்துள்ளன. இதனை எனது மிகப்பெரிய திட்டமாக நான் பார்க்கிறேன். அடுத்து தேசிய கிராமப்புற சுகாதார திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தாய் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, குழந்தை இறப்பு விகிதம் 55 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் நேரில் எனக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். அடுத்து பொது இடங்களில் புகையிலை பிடிக்க கூடாது. புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் காரணமாக கோடிக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.




    கேள்வி:- வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துகள் தொடர்பாக பா.ம.க. மீது தொடர்ந்து மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறாரே?

    பதில்:- சொத்துகளை அபகரிப்பது தி.மு.க.வின் குலத்தொழில். எங்கள் வேலை அதுவல்ல. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் சொத்துகளை அபகரித்து சிறைக்கு சென்றதை நாம் பார்த்தோம். நாங்கள் எடுக்கிறவர்கள் அல்ல, கொடுக்கிறவர்கள். இது போன்ற ஒரு பொய்யை மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தால் தொடர்ந்து எங்களை பற்றி, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பற்றி தனிநபர் விமர்சனம் மோசமான வார்த்தைகள் பேசி வருகிறார்கள்.

    நான் மு.க.ஸ்டாலினிடம் கேட்கிறேன். நாங்கள் எந்த விசாரணைக்கும் தயார். எங்கள் சொத்து பட்டியலை கொடுக்கிறேன். விசாரணை குழு, கோர்ட்டு விசாரணை, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ. விசாரணை எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என் பெயரிலோ, எங்கள் அம்மா, அப்பா பெயரிலோ, குடும்பத்தில் ஒருவர் பெயரிலே ஒரு சதுர அடி நிலமாவது வன்னியரின் சொத்தை நாங்கள் அபகரித்து உள்ளோம் என்று நிரூபித்தால், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கட்டுப்படுகிறேன். அப்படி, உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உங்கள் கட்சியில் நிறையபேர் அதை எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

    Next Story
    ×