search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம்
    X

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி தீவிரம்

    மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி இருந்தது.

    மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டினார்.

    இதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நினைவிட கட்டுமான பணியில் 10 பகுதி வேலைகளில் 8 பகுதி வேலைகள் ஓரளவு முடிந்துள்ளது. இதுதவிர நடைபாதை, வாகன நிறுத்துமிடம் பணிகளும் முடிவடைந்துள்ளது.

    அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மெயின் கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டெக்சருடன் கூடிய வடிவமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி. நிபுணர்கள் செய்து கொடுத்த வடிவமைப்புபடி கட்டுமான பணிகள் அவர்களது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களை கவரும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால் கட்டிட கலை நிபுணர்களும் அவ்வப்போது வந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டு வருவதுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதால் பார்வையாளர்கள் குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மிகவும் கலை நுணுக்கத்துடன் கட்டிட வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் நினைவிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கேற்ப பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டதும் பொதுமக்கள் பார்வையிட வந்து செல்லும் வகையில் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×